ஆந்திராவில் சுற்றுலா பயணிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில், 13 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திரமாநிலம் கோதாவரி மாவட்டத்தில் உள்ள கண்டிபோச்சம்மா கோவிலுக்கு ஞாயிறன்று 61 சுற்றுலாப் பயணிகள் ஒரே படகில் சென்றுள்ளனர். கச்சுலூரு என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இதில் ஆற்றில் மூழ்கி 13 பேர் உயிரிழந்த நிலையில், காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதுவரை ஆற்றில் மூழ்கியவர்களில் 23 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இச்சம்பவம் குறித்து அம்மாநில காவல் துறையினர் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்தையடுத்து படகு போக்குவரத்துக்கு அம்மாநில அரசு தடைவிதித்துள்ளது.